ஜேர்மனியில் பொலிசார் ஒருவரைக் கத்தியால் குத்திய தாக்குதல்தாரி கோமாவிலிருந்து மீண்டும், அவரது முரட்டுத்தனம் கொஞ்சமும் மாறவில்லை.
ஜேர்மனியை அதிரவைத்த கத்திக்குத்து சம்பவம்
கடந்த மாதம், அதாவது, மே மாதம் 31ஆம் திகதி, ஜேர்மன் நகரமான Mannheimஇல் இஸ்லாம் எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஒருவர் அங்கிருந்தவர்களைக் கத்தியால் தாக்கத் துவங்கினார்.
பொலிசார் ஒருவர் உட்பட ஆறு பேருக்கு காயங்கள் ஏற்பட, பொலிசார் ஒருவர் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டார். ஜேர்மனியில் சமீப காலமாக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் மன நிலை புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பிவரும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் ஜேர்மனியை அதிரவைத்தது.
காயமடைந்த பொலிசார் மரணம்
கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த Rouven Laur (29) என்னும் பொலிசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,இரண்டு நாட்களுக்குப் பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
கோமாவிலிருந்து கண்விழித்த தாக்குதல்தாரி
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரின் பெயர் சுலைமான் (Sulaiman Ataee, 25) என்றும், ஆப்கன் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவரான அவர், 2013ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் வாழ்ந்துவருவதாகவும் பின்னர் தெரியவந்தது.
பொலிசாரால் சுடப்பட்ட சுலைமான் கோமாவிலிருந்த நிலையில், தற்போது கண்விழித்துள்ளாராம். ஆனால், மரணத்தின் விளிம்பு வரை சென்று கோமாவிலிருந்து மீண்டும், அவர் தனது செயல்களுக்காக கொஞ்சமும் வருத்தப்படவில்லை என மருத்துவமனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சுலைமான் உயிர் பிழைத்ததே அற்புதம் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், மருத்துவமனை ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் சுலைமான், தன்னை உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுவிக்கவேண்டுமென அடம்பிடிக்கிறாராம்.
ஆனால், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் 24 மணி நேரமும் பொலிசார் காவலுக்கு நிற்கும் நிலையில், மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டபின் சுலைமானின் நிலைமை என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.