பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ் பெண் ஒருவர் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்டு உமா குமரன் என்ற பெண்ணே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரித்தானியாவின் லண்டனின் புறநகர்ப் பகுதியான ஸ்டார்ட்போர்ட் மற்றும் போவ் (Stratford and Bow) தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக உமா குமரன் போட்டியிடுகின்றார்.
தமது பெற்றோர் இலங்கையிலிருந்து ஏதிலிகளாக பிரித்தானியா வருகை தந்தவர்கள் எனவும், இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தாம் நன்றாக உணர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடர்பில் கருத்து வெளியிடும் போது தாய்நாட்டில் தமது சமூகம் அனுபவித்த நெருக்கடிகள் குறித்தும் விபரித்துள்ளார்.
காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க வேண்டியது அவசியமானது என கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தால் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
காசாவில் நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருவதாகவும் இந்த இரத்த வெள்ளத்தை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.