உயர்கல்விக்கான வட்டியில்லா கடன் செலுத்தும் நடவடிக்கை இன்னும் இடம்பெறாமல் இருப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவும்

30 0

அரச பல்கலைக்கழகங்களுக்குத் தகுதியற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வட்டியில்லா கல்விக் கடன் வசதித் திட்டத்தின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டங்களைப் பெறுவது தொடர்பான வர்த்தமானி இதுவரை வெளியிடப்படவில்லை. கல்வி அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளபோதும் அரச வங்கிகள் அதனை இன்னும் நநடைமுறைப்படுத்தால் இருக்கிறது. இதுதொடர்பாக அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்.

2020, 2021, 2022 ஆகிய கல்வியாண்டுகளுக்கு, அரச பல்கலைக்கழகங்களுக்குத் தகுதியற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வட்டியில்லா கல்விக் கடன் வசதித் திட்டத்தின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டங்களைப் பெறுவது தொடர்பான வர்த்தமானி இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த டிசம்பரில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், வட்டியில்லா கடனுதவியின் கீழ் பட்டப் படிப்பை எதிர்பார்க்கும் மாணவர்கள் அந்தப் பட்டப் படிப்புகளுக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அனைத்துப் பாடக் கட்டணங்களையும் செலுத்தக்கூடிய மாணவர்கள் கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ள நிலையில், அரசின் இந்த தாமதத்தால் அவர்களின் பட்டப் படிப்பு கனவு கலைந்துபோயுள்ளது. குறித்த மாணவர்கள் மன அழுத்தத்தில் உள்ளதால், ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ள தனியார் பல்கலைக்கழகப் பட்டப் படிப்புகளுக்கான நுழைவு அல்லது பதிவுக்கான வட்டியில்லா கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இது தொடர்பாக கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தும் இந்த அரச கொள்கை முன்னெடுக்கப்படாமல் இருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கொள்கை இதுவாக இருந்தால், இதனை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் செயற்படவில்லை என்றால் அது அதிகாரிகளின் தவறாகும்.  ஒரு நாடாக  இவ்வாறு எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது என்றார்.