2022- 2024 வரையான காலப்பகுதியேஅதிகளவான சட்டங்கள் தயாரிக்கப்பட்ட வருடங்கள்

29 0
இலங்கையில் அதிகளவில் சட்டம் தயாரிக்கப்பட்ட ஆண்டுகளாக 2022- 2024 வரையான காலப்பகுதி வரலாற்றில் பதியப்படுமென, நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு முதல் 59 சட்டச் சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, 7 சட்டமூலங்களும்  44 திருத்தச் சட்டங்களும்  எதிர்வரும் நாட்களில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஒவ்வொரு அமைச்சுக்களினதும் சட்டங்களைத் தயாரிப்பதில் நீதி அமைச்சு பெரும் பங்காற்றுவதாகவும், 2022 ஆம் ஆண்டில் 273 சட்ட வரைவுகளும், 2023 ஆம் ஆண்டில் 299 சட்ட வரைவுகளும் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க மேலும் கூறியதாவது:

“நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தக் காலப்பகுதி வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டியதாகும்.

எமது அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைய, 2022 இல் –  29, 2023 இல்  – 17, 2024 இல் – 13 என இதுவரை 59 சட்டச் சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 7 வரைவுகள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இன்னும் 44 மிக முக்கியமான சட்டத் திருத்தங்களுக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளன. ஒவ்வொரு அமைச்சின் சட்டங்களை வகுப்பதிலிலும் நீதி அமைச்சு பெரும் பங்காற்றுகிறது.

அதன்படி, சட்ட வரைவுத் திணைக்களம், மற்றைய அமைச்சுக்களுக்காக  2022 ஆம் ஆண்டில் 273  சட்ட வரைவுகளையும், 2023ஆம் ஆண்டில் 299 சட்ட வரைவுகளையும் மும்மொழிகளிலும் தயாரித்துள்ளது.

நீதித்துறையை செயற்திறன் மிக்கதாக மாற்றுவதன் மூலம் மக்கள் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய முடியும். வழக்கு தொடர்பான சொத்துக்களை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். மேலும் நல்ல முதலீட்டுச் சூழல் உருவாகி வருகிறது. எனவே, சட்டத்தின் தாமதத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருப்பது தெளிவாகிறது.

2017 ஆம் ஆண்டில் சட்ட விவகாரங்களுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு வழங்கிய அறிக்கையின்படி, ஒரு குற்றவியல் வழக்கை முடிக்க பொதுவாக 17 ஆண்டுகள் ஆகும். பல்வேறு ஆய்வுகளின்படி, ஒரு நிலம், பகிர்வு மற்றும் கணக்கீட்டு வழக்கை முடிக்க ஒரு தலைமுறைக்கு மேல் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையை மாற்றுவதற்கு தேவையான செயற்பாடுகளைத் திட்டமிட்டுள்ளோம்.

அதற்கான முக்கிய தீர்வாக நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டியுள்ளது. அதேபோல் மேலும் பல மாற்றங்களும் அவசியப்படுகின்றன. அதற்கான ஏற்பாடுகள் பல தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன.

42 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்துடன், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க முடிந்துள்ளது. கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக 76 நீதித்துறை அதிகாரிகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு தடவைகளில் 34 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதன் காரணமாக நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய நீதிமன்றங்களை நிர்மாணிக்கவும் முடிந்தது.

இந்த காலகட்டத்தில், உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை அறைகளின் எண்ணிக்கை 3 இலிருந்து 5 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிமன்ற அறைகளின் எண்ணிக்கை 5 இலிருந்து 10 ஆகவும் அதிகரிக்கப்பட்டன. மேலும், உயர் நீதிமன்றம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளமை சட்டத்தரணிகள் மற்றும் மக்களுக்கு பயனளிப்பதாக அமைந்துள்ளது.

மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு எளிதாக வர்த்தகம் செய்யும் குறியீட்டில் முதலிடம் பெற வேண்டியது அவசியமாகும். (Ease of doing business) வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேல் மாகாணத்தில் 4 வர்த்தக மேல் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோல் அதிகமான வர்த்தக மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், துறைமுக நகர (Port city) திட்டத்துடன் உருவாக்கப்பட்ட புதிய முதலீட்டுச் சூழ்நிலைக்கு, முதலீட்டாளர்களின் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க முதலீட்டு நீதிமன்றத்தை நிறுவுவதற்குத் தேவையான சட்டச் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், ஒரு சாதகமான முதலீட்டு சூழலை உருவாக்குவதற்கான செயலணி  (Enforcing Contract Task Force) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு சிவில் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் வழக்கு விசாரணைகளை விரைவாக மேற்கொள்ள முடிந்துள்ளது. எதிர்காலத்தில், தனியொரு நீதிபதியின் கீழ் முன்னைய வழக்குகளையும் விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட நீதிமன்றங்களில் குவியும் வழக்குகளில் கிட்டத்தட்ட 30% பணம் தொடர்பான வழக்குகளாகும். இதன் மூலம் நீதிமன்றங்களுக்கு வரும் பணம் தொடர்பான வழக்குகளின் அளவைக் குறைக்க, சமாதான நீதவான் சபைகளின் எல்லை 10 இலட்சம் ரூபாய் வரை விரிவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டில், சிறிய உரிமைகோரல் நீதிமன்றங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நீதித்துறைக் கட்டமைப்பில் ஒரு புதிய மாற்றத்தை அமைச்சு ஏற்படுத்தியது. 2 மில்லியன் ரூபாய் வரையிலான நிதி முரண்பாடுகளை இந்த நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கலாம். இதனால் நிதிச் சிக்கல்கள் மிக விரைவாகத் தீர்க்கப்படும். தற்போது கொழும்பு, கண்டி, மாத்தளை ஆகிய இடங்களில் தனியான சிறு உரிமைகோரல் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. எதிர்காலத்தில், பிற பகுதிகளில் இந்த சிறிய உரிமைகோரல் நீதிமன்றங்களை நிறுவு முடியும். அதுவரை மாவட்ட நீதிமன்றங்களில் இந்த முறைமை செயற்படுத்தப்படும்.

கிராமப்புற மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வசதியாக பல புதிய நீதிச் சபைகள் தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்படி மொரவெவ பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டதுடன், மேற்படி அறிக்கையின் பரிந்துரைகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும். மதவாச்சி, கஹடகஸ்தெனிய, நொச்சியாகம, களுவாஞ்சிக்குடி, நாரம்மல, கலவானையில் இருந்த சுற்றுலா நீதிமன்றங்கள், நீதவான் நீதிமன்றங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும் நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, சமரசமாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் செயல்முறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பிரச்சினைத் தீர்வு வீதம் 70% ஆகும். அதற்காக  சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்டு கிடைத்திருக்கிறது.

நீதி அமைச்சின் கீழுள்ள சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் திணைக்களம், பரிசோதகர் திணைக்களம், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையின் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்குத் தேவையான பணிகளையும் செய்துள்ளோம்.

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு 2023ஆம் ஆண்டில் மாத்திரம் 182,579 பேருக்கு சேவைகளை வழங்கியுள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன ஒவ்வொரு பிரஜையையும் சமமாகக் கருதி, சமாதானத்தை மதித்து, தேசிய அடையாளத்தை மதிக்கும் இலங்கையைக் கட்டியெழுப்ப அர்ப்பணிக்கின்றன. அதற்கு அவசியமான சட்டத் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

மேலதிக செயலாளர் (சட்டம்) பியூமந்தி பீரிஸ்

“கடந்த இரண்டு வருட காலம், பல புதிய சட்டங்களைத் தயாரித்து, ஏற்கனவே உள்ள சட்டங்களும் புதுப்பிக்கப்பட்ட காலம் எனலாம். 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில், 20ஆவது திருத்தத்தின் சாதகமான அம்சங்கள் மாற்றப்படவில்லை. குறிப்பாக 21ஆவது திருத்தத்தின் ஊடாக அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களையும் மீள ஸ்தாபிக்க முடியும் என்ற விடயம் மக்கள் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது. ஜனாதிபதியின் தவறுகளை விசாரணை செய்யும் திறன், அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு சட்ட சபையின் அங்கீகாரம் பெறுதல், மத்திய வங்கி ஆளுநரை நியமிப்பதில் அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரம் பெறுதல் போன்ற பல சாதகமான விடயங்களும் இதில் அடங்கியுள்ளன.

மேலும் ஊழல் தடுப்புச் சட்டம், நீர்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்ற மிக முக்கியமான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அபாயகர ஔடதங்கள் கட்டளைச் சட்டத் திருத்தத்தின்படி, 5 கிராமுக்கு மேல் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

மேலும், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், உரிய தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள் செலவு செய்த பணத்தின் அளவை அறிவிக்க வேண்டும். இது மிகவும் சாதகமான நடவடிக்கையாகும்.

மேலும், வணிக உயர் நீதிமன்றத்தில், வழக்குகளை முழுவதுமாக ஆங்கிலத்தில் விசாரிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, தற்போது ஒன்லைன் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  மேலும் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் வழக்குகளைத் தீர்ப்பதற்கு புதிய நடுவர் சட்டமூலம், சட்டமா அதிபரின் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் வழக்குகளை விரைவில் நிறைவுச் செய்வதற்கான பல சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.”

மேலதிகச் செயலாளர் (சட்ட மறுசீரமைப்பு) கிரிஷாந்தி மீகஹபொல,

“நீதித்துறை தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் இணைக்கும் Court Community Platform மென்பொருளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். அதற்காக நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தற்போது ஏனைய தொழில்நுட்ப உதவிகளுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் 3 கட்டங்களாக டிஜிட்டல் மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியும் பெறப்படவுள்ளது. இதற்கான முன்னோடித் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் பிணை கோரல் விண்ணப்பங்களும், பிணை வழங்கும் செயற்பாடும் தொழில்நுட்ப முறையின் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. கொழும்பில் உள்ள பல நீதிமன்றங்களில் டிஜிட்டல் காட்சிப் பலகைகளை நிறுவி, நீதிமன்ற மண்டபங்களில் மக்கள் கூடுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஒன்லைன் கட்டண முறைக்கு செல்ல வேண்டும்.”

மேலதிகச் செயலாளர் (பொறியியல்) எஸ்.ஏ.கே. சுபசிங்க,

“2022 ஆம் ஆண்டு 4862 மில்லியன் ரூபாயும், 2023 இல் 2748 மில்லியன் ரூபாயும், 2024 இல் 2743 மில்லியன் ரூபாயும் நீதி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இரத்தினபுரி, வெலிமடை, தெல்தெனிய ஆகிய இடங்களில் தேவையின் அடிப்படையில் 3 நீதிமன்ற வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் குருணாகலில் இரட்டை மாடி உத்தியோகபூர்வ குடியிருப்புக் கட்டடம் திறக்கப்பட்டது. புனரமைப்பு பணியின் ஒரு பகுதியாக நீதிச் சேவை ஆணைக்குழுக் கட்டடமும் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. காலி நீதிமன்ற வளாகம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், 16 மாடிகளைக் கொண்ட கொழும்பு 12 நீதிமன்ற வளாகத்தின் முதற்கட்டமாக 6 மாடிகளை நிர்மாணித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற வளாகம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. வாகரையில் புதிய நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அத்துடன் கம்பளை, சிலாபம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நீதிமன்ற நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.”

அரச பகுப்பாய்வாளர் டி. செனவிரத்ன,

“இந்தத் துறையினால்  2022, 2023, 2024  ஆண்டுகளில் வௌியிடப்பட்ட அறிக்கைகளே இதன் முன்னேற்றத்தின் மதிப்பீடாகும். அதன்படி 2022 ஆம் ஆண்டில் எமக்குக் கிடைக்கப்பெற்ற 42,895  வழக்குப் பொருட்களில்  40,756 பற்றிய அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் கிடைத்த 58,886 வழக்கு பொருட்களில் 53,253 பற்றிய அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் அறிக்கைகளை வழங்கும் செயற்பாடுகள் 37% வளர்ச்சியைக் காட்டுகிறது.  2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் வழக்குப் பொருட்கள் மீதான அறிக்கை வௌியீட்டில் 30% வளர்ச்சியைக் காட்டுகிறது.”

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் எச்.எச்.டி.என் உபுல்தெனிய,

“கடந்த 2 ஆண்டுகளில் சிறைச்சாலை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றி கண்டுள்ளன.  மேலும், சிறைகளில் நெரிசலைக் கட்டுப்படுத்த பல நீண்ட கால மற்றும் குறுகிய கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, தும்பறை, யாழ்ப்பாணம், அங்குனுகொலபலஸ்ஸ ஆகிய இடங்களின் இடப்பெயர்வை 2 வருடங்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு சிறைச்சாலையை வெளிப் பகுதிக்கு மாற்றுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.”

இழப்பீடு அலுவலகப் பணிப்பாளர் நாயகம் ஜே. கிருஷ்ணமூர்த்தி,

“இழப்பீட்டுக்கான அலுவலகம் ஏழு கொள்கைகளின் அடிப்படையில் மக்கள் சார்பாக செயல்படுகிறது. 2022 இல் அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட மக்களின் அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்காக நாங்கள் இன்னும் மக்களுக்கு நிதி நிவாரணம் செலுத்துகிறோம். மேலும், டிசம்பர் 2023 வரை 26,538 முறைப்பாடுகளுக்கும் நிதி நிவாரணம் வழங்கியுள்ளோம்.”

இந்த ஊடக சந்திப்பில், நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி) ஆர்.பி.எஸ். சமன் குமாரி, சட்ட உதவி ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் (சட்டம்) சட்டத்தரணி எஸ். எம். கே. ஹப்புஆராச்சி, சமரச ஆணைக்குழுவின் செயலாளர் டி. கே. ரத்னசூரிய, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியராச்சி, காணாமல் போனோர் அலுவலகத்தின் தரவு முகாமைத்துவப் பிரிவின் தலைவர் ஏ.என்.நுவான் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.