விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான தடை உத்தரவு மீண்டும் நீடிப்பு

41 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் சாமரி வீரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் விஜயதாச ராஜபக்ஷக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக மாவட்ட நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளினால் இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.