பல்கலைக்கழக நடவடிக்கைகள் வீழ்ச்சியடைய அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்

33 0

கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (14) கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அரசே மாதாந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரி, பயனுள்ள ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்து, பல்கலைக்கழக சமூகத்திற்கு பொது காப்புறுதி முறைமையை நடைமுறைப்படுத்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட 107 வீத சம்பளம் அதிகரிப்பை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கு” போன்ற  வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் தொடர் பணி பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புக்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏ.ஜெகராஜு கருத்து தெரிவிக்கையில்,

சம்பள மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்து    பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள், கல்விசார் உதவி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார ஊழியர்கள் இணைந்து மே மாதம் 2ம் திகதி தொடக்கம் இன்றுடன் 44 நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் பேசி உடன்பாட்டுக்கு வந்து அதற்கான எழுத்துமூல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அரசாங்கமும் இதற்குப் பொறுப்பான அரச நிறுவனங்களும் எமக்கான தீர்வை வழங்காது இழுத்தடிப்புச் செய்து வருவதையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பொறுப்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையே சாரும். ஆதலால், இவ்விடத்தில் தலையீடு செய்து ஊழியர்களின் கோரிக்கைளுக்கு செவிசாய்த்து பல்கலைக்கழக அனைத்து ஊழியர்களினதும் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக ஆணைக்குழு தலைவர் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

போதனைசாரா ஊழியர்களை புறந்தள்ளி பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என சிலர் சிந்திக்கின்றனர். ஆனால், எமது பணிபகிஷ்கரிப்பு காரணமாக பட்டமளிப்பு நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதை அவர்கள் சிந்திக்க தவறியுள்ளனர். கல்விசாரா உத்தியோகத்தர்களின் பலம் குறித்து அவர்கள் நன்கு உணரும் வகையில் சில நடவடிக்கைகளை இன்று தொடக்கம் ஆரம்பித்துள்ளோம்.

அந்த வகையில் பகிஷ்கரிப்பையும் பொருட்படுத்தாதது மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் வழங்கிவந்த சேவைகள் சிலவற்றை இன்றுமுதல் நிறுத்தியுள்ளோம். எமது பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்படாவில் மனிதாபிமான அடிப்படையில் தொடர்ந்தும் வழங்கப்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் முடக்கி சிலருக்கு பாடம் புகட்டவும் தயங்க மாட்டோம் என தெரிவித்தார்.