19 ஆவது திருத்தத்திற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 வருடங்களுக்கு மேல் அதிகரிக்க முடியாது

34 0

அரசியலமைப்பின் 19ஆம் திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் அதிகரித்துக்கொள்ள முடியாது.

அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் உரியக் காலத்தில் நடத்தப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பெப்ரல் அமைப்பு கொழும்பில் செவ்வாய்க்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் பிரகாரம் மக்கள் மக்கள் ஆணை இன்றி,  நாட்டின் ஜனாதிபதிக்கு 5 வருடங்களுக்கு அப்பால் சென்று ஜனாதிபதி பதவியை வகிக்கச் சட்ட ரீதியிலான அனுமதி இல்லை.

அரசியலமைப்பின் 83ஆவது உறுப்புரிமைக்கு அமைய, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களுக்கு அதிக காலத்துக்கு அதிகரித்துக்கொள்வதென்றால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்களிப்புக்குச் செல்லவேண்டும்.

ஆனால் அரசியலமைப்பின் 19ஆம் திருத்தத்தின்போது எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம்தான், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு தவணைக்கு மட்டுப்படுத்துவது மற்றும் ஒரு தவணைக்கு இருந்த 6 வருட காலத்தை 5 வருடமாகக் குறைப்பதாகும்.

அதன் பிரகாரம் 19ஆம் திருத்தத்துக்குப் பின்னர் நாட்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி 5 வருடங்களில் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால் எந்த வகையிலும் 5வருடங்களுக்கு அதிக காலத்துக்கு ஜனாதிபதி பதவியை கொண்டு செல்ல முடியாது.

அத்துடன் அரசியலமைப்பின் 40ஆவது உறுப்புரையின் பிரகாரம். ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ள சந்தர்ப்பத்தில், அதற்காக பதில் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டால், அவ்வாறு நியமிக்கப்படும் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதியாக பதவி வகித்த நபரின் பதவிக்காலம் முடிவடையும் வரைக்குமே பதில் ஜனாதிபதிக்கு பதவி வகிக்க முடியும்.

அதன் பிரகாரம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கோட்டாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்த எஞ்சிய காலப்பகுதி வரைக்குமே ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என்பது தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி ஒருவருக்கு 5 வருடங்களுக்காக வழங்கப்பட்ட மக்கள் ஆணையை 6 வருடங்களுக்கு கொண்டு செல்ல எந்த வழியும் இல்லை. அரசியலமைப்பை எந்த அரத்தத்தில் ஆராய்ந்து பார்த்தாலும் அதேபோன்று நீதிமன்ற தீர்ப்புக்களை பார்த்தாலும் தற்போதுள்ள ஜனாதிபதிக்கு, கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்து, அவருக்கு எஞ்சியுள்ள காலம் மாத்திரமே ஜளாதிபதி பதவியை வகிக்க முடியும். அதனால் அரசாங்கம் ஜனநாயக முறையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம். எனவே ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துவது கட்டாயமாகும் என்றார்.