யாழ். சென் சார்ல்ஸ் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை சஜித் பிரேமதாசவால் கையளிப்பு

44 0

“நவீன உலகின் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந் நாட்டின் இளைய தலைமுறையை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஸ்மார்ட் கணினி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் சக்வச என்ற செயற்றிட்டத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வருகை நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) சென் சார்ல்ஸ் மகா வித்தியாலயத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ,  ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் உமா சந்திர பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

5 கணினிகளும் ,  1 அச்சுப்பொறியும் ,  smart board உம் வழங்கப்பட்டதோடு புதிய ஸ்மார்ட் வகுப்பறையும் திறந்து வைக்கப்பட்டு நேற்றையதினம்  உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முதலில் சஜித் பிரேமதாஸ அவர்களால் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதோடு அதனை அடுத்து தொடர்ந்தும் பாடசாலை மாணவிகளால் வரவேற்பு நடனம் இடம்பெற்றதோடு, பாடசாலை மாணவியினால்  வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்தும் பாடசாலை அதிபர் லெனின் குமார் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்தும் கிருபாகரன் அவர்களாலும் உரை நிகழ்த்தப்பட்டதோடு, பாடசாலை அதிபர் அவர்களால் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது.

அவ் உரையின் போது  தினமும் ஆங்கில மொழியினை கற்குமாறும் அதனை கற்பதற்கான வழிமுறைகளும் சஜித் பிரேமதாஸ அவர்களினால் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதோடு , குறித்த பாடசாலைக்கான இரட்டை மாடிக் கட்டிடம் மற்றும் அரங்கும் அமைத்துத்தரப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

தொடர்ந்தும் சஜித் பிரேமதாஸ அவர்களினால் மாணவர்களுக்கு 5  அகராதிகள் வழங்கப்பட்டதோடு ,நடனம் தொடர்பான ஆடை அணிகலன்களுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியும் கையளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் அவர்கள் உரையின் போது மாணவர்களின் கற்றல் தேவைகளுக்கு தேவையான டிஜிட்டல் உபகரணங்களை பெற்றுத் தந்த எதிர்க்கட்சித் தலைவருக்கும், அவ் உபகரணங்களை பெற்றுக் கொள்ள துணையாக இருந்த கிருபாகரன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு , மேலும் பாடசாலையில் பெளதிக வள பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்து தருமாறும் பாடசாலை அதிபர் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.