நீதிமன்ற அறையில் வழக்கறிஞர்கள் சந்திக்க வர வேண்டாம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

30 0

 ‘நீதிமன்ற அறையில் தன்னை சந்திக்க வர வேண்டாம். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம்’ என வழக்கறிஞர்களை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாயார் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.இந்த மனு விடுமுறை கால நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பாலாஜி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து, சவுக்கு சங்கர் வழக்கை விசாரிக்கக்கூடாது என அதிகாரம் மிக்க நபர்கள் தன்னிடம் கேட்டுக்கொண்டதால், வழக்கை அவசரமாக விசாரித்தாகவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவில் நீதிபதி பாலாஜி மாறுபட்டார். அவர் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். இதையடுத்து வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கமான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற அறையில் தன்னை சந்திக்க வர வேண்டாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது நீதிமன்றத்தில் (12வது நீதிமன்றம்) ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில், ‘வழக்கறிஞர்கள் தன்னை நீதிமன்ற அறையில் சந்திக்க வர வேண்டாம். என்னிடம் சொல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு என்னை அழைக்க வேண்டாம். இந்த மாதம் 3 நிகழ்வுகளில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளேன். அந்த நிகழ்வுகளில் பங்கேற்பேன். அதன் பிறகு என்னை நிகழ்வுகளுக்கு அழைத்து தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அவரது மற்றொரு நோட்டீஸில், ‘தேதி குறிப்பிட்டு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகள் அந்த தேதியில் எடுக்கப்படும். மற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு மூப்பு அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பட்டியலில் உள்ள வழக்குகளை முன்கூட்டியே விசாரணைக்கு எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது.