இன்றும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

51 0

ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (09) தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு வழங்குவதில் தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு கடந்த 06ம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் இந்த தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்றால் தொழிற்சங்க நடவடிக்கை கடுமையாக்கப்படும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர்  வினவிய போது தெரிவித்தார்.

அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்தும் நோக்கில் 21 பேரால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனை கருத்திற்கொண்டு இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.