இந்தியாவில் கைதாகி சிறையிடப்படும் இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை

33 0
சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடற்பரப்புக்குள் சென்று, இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அவ்வாறான மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் விடுவிக்கப்பட்டு, நாடு திரும்ப நடவடிக்கை எடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P.) மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளரும் அமைச்சரின் மாவட்ட இணைப்பாளருமான சுப்பையா  சந்துரு தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (8) பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

மன்னார் -தலைமன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 2023ஆம் ஆண்டு 11 மாதம் இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்திய சிறைகளில் வாடியிருந்தார்கள். அவர்களை விடுவிக்கக் கோரி அவர்களுடைய  குடும்பத்தினர் எமது கட்சியை நாடியிருந்தனர்.

நாங்கள் அவர்களது கோரிக்கையை ஏற்று, இவ்விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசென்றோம்.

அதனையடுத்து, அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்து மீனவர்களும் நாடு திரும்பியுள்ளனர்.

அதேபோல் இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இந்திய எல்லையை தாண்டி, இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்கள் பல காலங்களாக சிறையில் வாடும் நிலை காணப்பட்டது.

இனிமேல் அவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், அவை எங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால், நாங்கள் நிச்சயம் அமைச்சரை தொடர்புகொண்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

மேலும், விடுதலையான தலைமன்னாரை சேர்ந்த 5 மீனவர்களும் அமைச்சரின் மன்னார் அலுவலகத்துக்குச் சென்று நன்றி தெரிவித்ததோடு ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்துள்ளனர்.