10 டன் வெடிகுண்டு வீச்சில் 36 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

259 0

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானம் 10 டன் எடைகொண்ட சக்திவாய்ந்த வெடிகுண்டை ஐ.எஸ். பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 36 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு ஆட்சி நடந்து வருகிறது. இதை அகற்றுவதற்காக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலைநகர் காபூலிலும், நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.குறிப்பாக பாகிஸ்தானையொட்டி அமைந்த எல்லையோர மாகாணமான நங்கார்ஹரில் உள்ள அச்சின் மாவட்டத்தில் மோமண்ட் தாரா என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பூமிக்கு அடியில் பல அடி ஆழத்துக்கு சுரங்கம் அமைத்து ஆயுதங்களை குவித்து வைத்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

இதையடுத்து பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் எம்.சி.-130 ரக சரக்கு விமானம் மூலம் 9,797 கிலோ எடைகொண்ட ஜி.பி.யூ-43 ரக வெடிகுண்டு எடுத்துச் செல்லப்பட்டு பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வீசப்பட்டது.

சுமார் 30 அடி நீளமும் மூன்றரை அடி விட்டமும் கொண்ட இந்த வெடிகுண்டு விழுந்து வெடித்து சிதறிய அடுத்த வினாடியில் பயங்கரவாதிகள் முகாம் முற்றிலும் சின்னாபின்னமானது. அவர்கள் அமைத்து இருந்த சுரங்கமும் இடிந்து நொறுங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே 36 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தவிர அந்த பகுதி பயங்கரவாதிகள் எப்போதும் பயன்படுத்த முடியாத அளவிற்கு நிர்மூலம் ஆனது.முன்னதாக 10 டன் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், “எங்கள் திட்டம் துல்லியமாக இருந்தது. மிக மிக வெற்றிகரமான முறையில் அமைந்தது” என்றார்.அச்சின் மாகாண கவர்னர் இஸ்மாயில் சின்வாரி கூறும்போது, “இதற்கு முன்பு இதுபோன்ற தாக்குதலை நான் கண்டதில்லை. அந்த அளவிற்கு குண்டுவீச்சு காரணமாக எழுந்த தீ நெருப்பு பந்து போல காட்சியளித்தது” என்றார்.

அமெரிக்க போர் விமானம் வீசிய ஜி.பி.யூ-43 ரக வெடிகுண்டு 2003-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்த ரக வெடிகுண்டு, அனைத்து வெடிகுண்டுகளுக்கும் தாய் என்று வர்ணிக்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து 11 டன் அளவிற்கு இணையான வெப்ப சக்தியை வெளியேற்றி பலத்த சேதத்தை ஏற்படுத்தும்.இத்தகைய சக்திவாய்ந்த வெடிகுண்டை அமெரிக்கா, பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பயன்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும். இந்த வெடிகுண்டின் அடுத்த நிலைதான் அணுகுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.