அமெரிக்காவில், மெட்ரோ ரெயிலில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

242 0

அமெரிக்காவில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரம் உள்ளது. அங்கு உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் ஒரு மெட்ரோ ரெயில் வந்து புறப்பட்டது.ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு பெட்டியில் இருந்த மர்மநபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென அங்கு இருந்த பயணிகளை நோக்கி சுடத்தொடங்கினார்.

இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்தவர்களை அட்லாண்டா மெட்ரோ ரெயில் நிலைய போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபரை அட்லாண்டா நகரை அடுத்த மேற்கு ஏரி ரெயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.அவர் யார்? எதற்காக பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.