ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள், மீன்கள் உயிரிழப்பு ; விசாரணை

40 0
கடந்த சில நாட்களாக  ரம்சா சதுப்பு நிலமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மீன்கள் உயிரிழந்துள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் இக்காலப்பகுதியில் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் சுதந்திரமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும்.

இந்நிலையில், அப்பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து கொட்டப்படும்  இரசாயனக் கழிவுகளால் பறவைகள் மற்றும் மீன்கள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த மீன்கள் மற்றும் பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக பேராதனை சிறப்பு கால்நடை மருத்துவப் பிரிவுக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆய்வக பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை வன விலங்கு வட்டார பாதுகாவலர் டபிள்யூ.எல் உபநந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாசிகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டப்படுவதால்  நீர்நிலைகள் மாசுபட்டுள்ளதாகவும், இதன் விளைவாக மீன்கள் மற்றும் பறவைகள் உயிரிழப்பதாகவும் நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.