உயிரை மாய்த்து கொல்வதற்கு முன்பு செல்பி ; துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு

30 0

காலி மாவட்டத்தில் தெல்வத்த – மீட்டியாகொடை பகுதியில் வீடொன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரொருவரின் சடலம் நேற்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

இளைஞன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு எடுத்துள்ள செல்பியை வைத்து இது தற்கொலையாக இருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞன் ஹிக்கடுவை தெல்வத்த மெட்டிவல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

மகன் காலையில் எழுந்திருக்காத நிலையில் அறையின் கதவைத் திறந்தபோது, இவரது சடலம் தரையில் கிடப்பதைக் கண்டதாக  தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் அருகில் இருந்த துப்பாக்கியை கருவா தோட்டத்தில் வீசியதாக தாயாரும் பாட்டியும் விசாரணையின் போது பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து பொலிஸார் இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ள பயன்படுத்திய துப்பாக்கியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும், இளைஞன் போதைக்கு அடிமையானவர் என்பதும், காதலியால் காதல் உறவு துண்டிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என்பதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞனின் கைத்தொலைபேசியை பொலிஸார் ஆய்வு செய்ததில் இவர் தன்னைத்தானே சுட்டுக் உயிரை மாய்த்து கொள்வதற்கு முன் அவர் எடுத்த செல்பியைக் கண்டுப்பிடித்தனர்.

காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிரின் பணிப்புரையின் பேரில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.