வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

34 0

ஜனாதிபதி எதிர்வரும் நாட்களிலே யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் அறிகின்றோம். எனவே ஜனாதிபதிக்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐம்பதாயிரம் குடும்பங்கள் சார்ந்த 2 இலட்சம் மக்கள் சார்பில் வேண்டுகோளொன்றை விடுக்கின்றோம் என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்ச் சங்க இணைப்பாளர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் நேற்று(21.05.2024) யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த போது 2016 ஆம் ஆண்டு இலங்கை இந்திய கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஒர் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதனடிப்படையிலே கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வடக்கு கடற்றொழில் சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்த வருடத்தின் முற்பகுதியில் ஜனாதிபதி யாழ்பாணத்திற்கு வந்த போது கூட மாவட்ட செயலகத்திலே கடற்றொழிலாளர்கள் அவருடன் கலந்துரையாடி தீர்வு பெறலாம் என்று ஆவலோடு எதிர்பாத்திருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.