‘நிதியியல் அறிவு வழிகாட்டி’ வெளியிடப்பட்டுள்ளது!

38 0

பொதுமக்கள் மத்தியில் நிதியியல் அறிவை மேம்படுத்தல் மற்றும் நிதியியல் செயற்பாடுகளில் அனைவரையும் உள்வாக்குதல் ஆகியவற்றின் ஊடாக பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ‘நிதியியல் அறிவு வழிகாட்டி’ வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களிடையே நிதியியல் அறிவை மேம்படுத்துவதையும், நிதியியல் செயற்பாடுகளில் அனைவரையும் உள்வாங்குவதையும் இலக்காகக்கொண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் அனுசரணையுடன் இலங்கை மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்டுள்ள ‘நிதியியல் அறிவு வழிகாட்டி’ செவ்வாய்கிழமை (21) மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இந்த வழிகாட்டி ஓர் தேசிய செயற்திட்டம் எனவும், இதற்கு அனைத்துத்தரப்பினரதும் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பவற்றை அடைந்துகொள்வதற்கு நிதியியல் அறிவு அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், நிதியியல் செயற்பாடுகளில் நாட்டுமக்கள் அனைவரையும் உள்வாங்குவதை முன்னிறுத்தி மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.

‘பொதுமக்கள் வைப்பு மற்றும் முதலீடு உள்ளிட்ட நிதிசார் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், நிதிமோசடிகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் நிதியியல் அறிவு பெரிதும் உதவும் என்பதுடன், இது நிதியியல் முறைமை மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.

அத்தோடு மக்கள் மத்தியில் நிதியியல் அறிவை மேம்படுத்துவதன் ஊடாக வறுமை மட்டத்தைக் குறைப்பதற்கும், அதன்மூலம் சமூகப்பாதுகாப்பு உதவித்திட்டங்களுக்கான அரசாங்கத்தின் செலவினங்களை மட்டுப்படுத்துவதற்கும் இயலும்’ எனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

அதுமாத்திரமன்றி தற்போது வெளியிடப்பட்டுள்ள நிதியியல் அறிவு வழிகாட்டிக்கு அப்பால், நிதியியல் அறிவு சார்ந்த விடயங்கள் பொதுமக்களால் உள்வாங்கிக்கொள்ளப்படல், அதனை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் மத்தியில் நிதியியல் முறைமையொன்று கட்டியெழுப்பப்படல் மற்றும் நிதியியல் அறிவை தலைமுறைகள் கடந்த மாற்றமாக நிலைமாற்றமடையச்செய்தல் ஆகியவற்றுக்குத் தாம் முன்னுரிமை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து உரையாற்றி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுஸா குபோட்டா கூறியதாவது:

இந்த ‘நிதியியல் அறிவு வழிகாட்டி’ என்பது மிகவும் அவசியமான உடனடி நகர்வாகும். நான் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினேன்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதுமாத்திரமன்றி எம்மால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் பெரும் எண்ணிக்கையான மக்கள் பல்பரிமாண காரணிகளால் நலிவடைந்த நிலையில் இருப்பதுடன், பலர் நாளாந்தம் ஒருவேளை உணவைத் தவிர்க்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு போதிய நிதியியல் அறிவின்மை காரணமாக குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச்சேர்ந்த பெண்கள் கடன் நிபந்தனைகள் பற்றிய தெளிவின்றி கடன்பெற்று, பின்னர் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த ‘நிதியியல் அறிவு வழிகாட்டி’ சகலருக்கும் உதவியாக அமையும் என்பதுடன், பொருளாதார மேம்பாட்டுக்கும் பங்களிப்புச்செய்யும் நம்பிக்கை வெளியிட்டார்.