லுணுகலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் : கணவன் கைது !

21 0

லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜனாதாபுர, தம்பிட்டியவத்த பகுதியில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலைக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (19) லுணுகலை ஜனதாபுர , தம்பபிட்டிய வத்த, கும்புக்கன் ஓயாவில் மீட்கப்பட்டது.

இரு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய குறித்த பெண்ணின் தலையில் பலத்த காயம் காணப்பட்டதுடன் , தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக 17 வயதுடைய மூத்த மகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப் படுத்தியதன் காரணமாக  கொலையாளியான சந்தேக நபர் வாடகைக்கு அமர்த்திய முச்சக்கர வண்டியின் சாரதி (36 வயது) பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது முதலில் சிறிய கல் ஒன்றினால் தலை பகுதியை தாக்கியதன் பின்னர் பெரிய கல் ஒன்றினால் தாக்கி கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருவருக்கும் இடையே மிக நீண்ட காலமாக குடும்ப தகராறு காணப்பட்டதாகவும் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதாகவும் பெண்ணின் வீட்டு பகுதிக்கு குறித்த நபர் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (21) சந்தேக நபரையும்,  முச்சக்கர வண்டியின் சாரதியையும் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.