போதைப்பொருளை பயன்படுத்திய யுவதி பொலிஸாரிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்து உயிரிழப்பு

38 0

ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளை பயன்படுத்தி கொண்டிருந்த  யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வீட்டு மாடியிலிருந்து குதித்த போது இரும்பு கம்பிகள்  வயிற்றில் குற்றியதில் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாதுக்கை, குருந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம, ஹிரிப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த வீட்டை சோதனைக்குட்படுத்தினர். அப்போது,  அங்கிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்த போது இரும்பு கம்பிகள்  அவரது வயிற்றில் குற்றியுள்ளன.

இதனையடுத்து காயமடைந்த யுவதி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திலிருந்த முறைப்பாட்டாளரின் கணவர் மற்றும் அவரது நண்பர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.