“மதுபானசாலைக்கு அனுமதி வேண்டாம்” : மன்னார் – நானாட்டானில் மக்கள் மழைக்கு மத்தியில் போராட்டம்

55 0

ன்னார் – நானாட்டான் நகர பகுதிக்குள் எந்தவொரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என அறிவுறுத்தி  திங்கட்கிழமை (20) மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நானாட்டான் விவசாய அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நானாட்டான் சுற்றுவட்டத்தில் இருந்து நானாட்டான் பிரதேச செயலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வருகைதந்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

நானாட்டானில் இந்து மற்றும் கத்தோலிக்க பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களில் மென் மதுபான விற்பனை நிலையம் இயங்கிவருகிறது.  அதேவேளை, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கள்ளுத்தவறணை காணப்படுகிறது. இதனால் மென் மதுபானசாலையை உடனடியாக நிறுத்தும்படியும் நானாட்டான் ஒலி மடு பகுதியில் அமைந்துள்ள கள்ளுத்தவறணையை  வேறு இடத்துக்கு மாற்றம் செய்யுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

‘மது பாவனையை ஊக்கப்படுத்துபவர்களே மக்களையும் மாணவர்களையும் வாழவைக்க உதவிடுங்கள்’, ‘எமக்கு கிடைத்த சாபம் மதுக்கடை அதை இன்றே ஒழிப்போம்’, ‘உழைப்பை பறிக்க வந்த சாத்தான் இந்த மதுபானமும் மதுக்கடையும்’, ‘குடி சிலரின் இன்பம் பலரின் துன்பம்’, ‘மது விற்று கிடைக்கும் காசு உனக்கே நீ தேடும் சாபம்’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், இந்து ஆலய குருக்கள், முருங்கன் விகாராதிபதி, முன்னால் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிப்பதற்காக நானாட்டான் பிரதேச செயலாளர் சிவசம்பு கனகாம்பிகையிடம் போராட்டக்காரர்களால் வழங்கப்பட்டது.