குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரனா?

35 0

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

இருப்பினும், வெள்ளப்பெருக்கில் அஸ்வின் என்ற சிறுவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். தொடர்ந்து, கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதைதொடர்ந்து தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே சிற்றருவி, செண்பகாதேவி அருவி, புலி அருவி ஆகியவை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த அஸ்வின், சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழனுமான வஉசியின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் சிறுவன் அஸ்வின் இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் இருப்பதால் இதுகுறித்து பேச அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் வீட்டுக்கு வேறு யாரும் வர வேண்டாம் எனவு அவர்கள் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.