மலையகத்திலும் வாழும் கலை அமைப்பின் செயற்பாட்டை ஆரம்பிக்க உதவுவேன் – நுவரெலியாவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

46 0

லங்கையில் மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை நிறுவக செயற்பாடுகளை ஆரம்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த வேண்டுகோளுக்கு உதவுவேன் என ஆன்மிக குருவும் அமைதி தலைவரும், வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின் தாபகருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நுவரெலியாவில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா – சீத்தாஎலிய பிரதேசத்தில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த மஹா கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை (18) வருகைதந்தார்.

அவர் இன்று நுவரெலியாவுக்கு விஜயம் செய்து, நுவரெலியா சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக சாந்தியில் கலந்து சிறப்பித்து ஆசியும் வழங்கினார்.

அதன் பின் நுவரெலியா “கிறேன்ட் ஹோட்டல்” சுற்றுலா விடுதிக்கு விஜயம் செய்த ரவிசங்கர், அங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி நீர் வளங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பி.இராஜதுரை பாரத் அருள்சாமி உள்ளிட்ட இ.தொ.கா உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் இலங்கையில் மலையக மக்களின் நலத்திட்டத்துக்காக பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ரவிசங்கர், வாழும் கலை அறக்கட்டளை அமைப்பின் செயற்பாட்டை மலையகத்திலும் பலப்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதாகவும், பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்க இடங்கள் உள்ளிட்ட வசதிகளை எதிர்பார்ப்பதாகவும் இதற்கான உதவிகளை தனது அறக்கட்டளை நிறுவகம் ஊடாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், ஆன்மிக கற்கை நெறி பாடசாலைகளை ஆரம்பித்தல், வாழும் கலை பயிற்சிகள், பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தனது அறக்கட்டளை ஊடாக செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.