இனப்படுகொலை உட்பட சர்வதேச குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபொறிமுறை அவசியம்

64 0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாகின்ற நிலையில் தமிழ் மக்கள் 2009 இனப்படுகொலைகளை நினைவுகூரூம்போது அவர்களிற்கு தங்கள் ஆதரவை வெளியிடுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி தருணங்களின் போது அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இனப்படுகொலையின் போது கொல்லப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்களை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் நினைவுகூரூம்போது நான் அவர்களிற்கு ஆதரவாக உள்ளேன் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் பிரதி சம்மர் லீ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதியளவு நீதியின்மை இந்த பயங்கரமான குற்றங்களிற்கு காரணமான யுத்த குற்றவாளிகள் அந்த நாட்டில் அதிகாரத்தைஅனுபவிக்க அனுமதியளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை உட்பட சர்வதேச குற்றங்களிற்கு காரணமானவர்களை விசாரணை செய்வதற்காக சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டும் என நான் வேண்டுகோள்விடுக்கின்றேன் என தெரிவித்துள்ள அவர் நீதிவழங்கப்பட்டபின்னரே அர்த்தபூர்வமான அமைதியையும் ஸ்திரதன்மையையும் ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் இனப்படுகொலை தினமான இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது துயரம் தரும் விதத்தில் பறிக்கப்பட்ட உயிர்களை நினைவுகூருவதில் தமிழர்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டெபேரா ரோஸ் தெரிவித்துள்ளார்.

 

இன்றும் ஒவ்வொரு நாளும் நாங்கள் இந்த துயரத்தை நினைவுகூருவதுடன் பாதிக்கப்பட்டவர்களிற்கும் அவர்களின் குடும்பத்தவர்களிற்கும் நீதியை கோரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.