நெடுந்தீவின் பிரதான மின் கட்டமைப்புடன் புதிய மின்பிறப்பாக்கி இணைக்கப்பட்டது!

43 0

நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணிநேர மின்சார வழங்கலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (18) முதல் சீரான மின்சாரம்  நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமக்கான அவசர தேவைகளை கருத்தில் கொண்டு அதிக அக்கறையுடன் செயற்பட்டு துரித கதியில் புதிய மின்பிறப்பாக்கி பெற்றுத்தந்து, தடையற்ற மின்சார சேவைக்கு வழிவகை செய்து கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெடுந்தீவு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

முன்பாக, மின்பிறப்பாக்கிகளில் அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக நெடுந்தீவு பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள், தாம் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிடுவதாக தெரிவித்தும், அதற்கான தீர்வினை வழங்குமாறு கோரியும், இந்த பிரச்சினையை யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசென்றனர்.

இதையடுத்து துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமைச்சர் நெடுந்தீவுக்கு புதிய மின்பிறப்பாக்கி ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

அமைச்சரது தொடர் முயற்சிகள் காரணமாக கடந்த வாரம் கடற்படையினரது உதவியுடன் பாரிய மின்பிறப்பாக்கியொன்று கொழும்பிலிருந்து சுன்னாகம் பிரதான மின்சார நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த மின் பிறப்பாக்கி கடற்படையினரது உதவியுடன் நெடுந்தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

தொடர்ந்து, நேற்று நெடுந்தீவு மின்சார நிலையத்தில் அது பொருத்தப்பட்டு நெடுந்தீவின் பிரதான மின்மார்க்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து நேற்று இந்த மின்பிறப்பாக்கி மூலமாக நெடுந்தீவுக்கான மின்சார சேவை சீரான முறையில் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்துள்னர்.