சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் ரூ.96 கோடி ஜிஎஸ்டி, அபராதம் செலுத்த பிறப்பித்த உத்தரவு ரத்து

41 0

 சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை டேங்கர் லாரிகள் மூலமாக விற்பனை செய்த வகையில் கிடைத்த தொகைக்கு ரூ.96.10 கோடியை ஜிஎஸ்டி வரிக்கான வட்டி மற்றும் அபராதமாக செலுத்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு, கடந்த 2023 டிசம்பரில் மத்திய ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் பிறப்பித்த ஒரு உத்தரவில், ‘‘சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனைசெய்ததால் கிடைத்த வருவாய்க்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அந்த வகையில் ரூ.96 கோடியே 10 லட்சத்தை ஜிஎஸ்டி வரிக்கான வட்டி மற்றும் அபராதமாக செலுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராம மூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.விஜயராகவன், ‘ஜிஎஸ்டி வரம்பில் இருந்து அரசுநிறுவனம் வழங்கும் சேவைகளுக்கு விலக்களித்து கடந்த 2017-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதன்படி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தமிழக அரசு நிறுவனம் என்பதாலும் பொது சேவைக்காக குடிநீர் விநியோகம் செய்வதாலும் அந்த நிறுவனம் வழங்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து அளிக்கப்பட்டுள்ள விலக்கு பொருந்தும்’ என வாதிட்டார்.

ஜிஎஸ்டி ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் குட்டி, ‘சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் குழாய் மூலமாக வீட்டு இணைப்புகளுக்கு மட்டுமின்றி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வர்த்தக நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் டேங்கர் லாரிகள் மூலமாகவும் விற்பனை செய்வதால் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் வரும்.ஆகவே இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸில் எந்த விதிமீறலும் இல்லை’ என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜிஎஸ்டி ஆணையர் இவ்வாறு வரி செலுத்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் விளக்கத்தை கோரவில்லை. குடிநீர் விநியோகிக்கப்பட்டதா அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யப்பட்டதா என்பதை தெளிவுபடுத்தாமல் ஜிஎஸ்டி வரி செலுத் தும்படி கோர முடியாது.

எனவே ஜிஎஸ்டி கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம், ரூ.3 கோடியை 6 வாரங்களில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஜிஎஸ்டி ஆணையத்துக்கு செலுத்த வேண்டும். அதன் பிறகு 3 மாதங்களில் இது தொடர்பாக விளக்கமளிக்க குடிநீர் வழங்கல் வாரியத்துக்கு போதிய வாய்ப்பு அளித்து புதிதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஜிஎஸ்டி ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.