சாதிக்காய் விலையில் பாரிய வீழ்ச்சி : விவசாயிகள் பாதிப்பு

30 0

இலங்கைக்கு வெளிநாட்டுச் செலாவனியைப் பெற்றுத் தரும் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் (nutmeg) விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தாம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கண்டி மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த சாதிக்காய் உற்பத்தியின் 80 சதவீதம் கண்டி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்தபோதும் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்றுமதி விவசாய திணைக்களம் பெற்றுத் தந்துள்ள தரவுகளின்படி 2022ஆம் ஆண்டு நாட்டில் 2936 ஹெக்டேயர் நிலத்தில் சாதிக்காய்  உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், 476.06 மெட்ரிட் தொன் சாதிக்காய் உற்பத்தியை ஏற்றுமதி செய்ததன் மூலம் 2022இல்  பெறப்பட்டுள்ள வெளிநாட்டு செலாவணி 797.18 மில்லியன் ரூபாயாகும்.

இருந்தபோதும் சில மாதங்களுக்கு முன் 1300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சாதிக்காயின் விலை தற்போது 700 ரூபாயாக  குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சாதிக்காய் தயாரிப்பதற்கு பெரும் செலவீனம் ஏற்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சாதிக்காய் உற்பத்தி மூலம் பெறப்பட்ட வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை காண முடிவதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் அந்த விவசாயிகள், இதற்கு தீர்வாக அரசாங்கம் முன்வந்து சலுகைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றனர்.