நினைவேந்தலுக்கு எதிரான நடவடிக்கைகளால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் உள நெருக்கடிக்குள்ளாகின்றனர்

54 0

லங்கையின் படைத்தரப்புகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பது சாத்தியமற்றுப் போய், இலங்கை நீதிக் கட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், அண்மைக்காலமாக நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குதல் போன்ற சம்பவங்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் உள நெருக்கடிகளுக்கு உள்ளாக்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இறுதிக்கட்ட ஈழப்போரின்போது இலங்கை இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் “முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை” நினைவேந்தல்கள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இலங்கை காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்புக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டு நினைவுகூரும் உரிமைகள் மறுக்கப்படும் விதமாக வன்செயல்கள் அரங்கேறி வருகின்றமையை மாணவர்கள் சமூகமாக நாம் கூர்ந்து நோக்குகின்றோம்.

அண்மையில் திருகோணமலை சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினைப் பரிமாறி, போரில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்த மக்கள் இலங்கை காவல்துறையினால் கைது செய்யப்பட்டமை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கிய பொதுமக்கள் சிறிலங்கா காவல்துறையினால் அச்சுறுத்தப்பட்டமை, நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பென்பது ஆட்புல மற்றும் குடிசன ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டு, கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை படைத்தரப்புக்களால் நினைவேந்தல் சார்ந்த நிகழ்வுகள் கண்காணிக்கப்படுவது, நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள் அச்சுறுத்தப்படுவதோடு, நிகழ்வுகளை தடுக்கும் செயற்பாடுகளில் படையினர் தீவிரத்தன்மையுடன் ஈடுபடுவதை அண்மைக்காலங்களில் காணக்கூடியதாக உள்ளது.

அனைத்துலக சமூகத்தில் நினைவுகூரல் என்பது மனித உரிமைகளாக மதிக்கப்படும் நிலையில், 2009ஆம் ஆண்டு ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் வகையில் ‘மே 18’ முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலை மக்கள் அனுஷ்டித்து வருகின்றனர்.

ஈழப்போர் முடிவுக்கு வந்ததன் பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல்கள் ஏதும் வழங்கப்படாத ஒரு நிலையில், போரின் வடுக்களிலிருந்தும் அதன் கொடூர முகங்களிலிருந்தும் விடுபடுவதற்கான உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கான மாற்றாக நினைவேந்தல் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

இலங்கையின் படைத்தரப்புகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பது சாத்தியமற்றுப் போய், இலங்கை நீதிக் கட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், அண்மைக்காலமாக நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்குதல் போன்ற சம்பவங்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் உள நெருக்கடிகளுக்கு உள்ளாக்குகின்றன.

நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் பொதுமக்களை ஆங்காங்கே அச்சுறுத்தி தடுப்பது மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அப்பாவி பொதுமக்கள் மீது பிரயோகிப்பது என்பவற்றினூடாக நினைவேந்தல் செயற்பாடுகளிலிருந்து தமிழ் மக்களை விலக வைப்பதற்கு இலங்கை அரசு முழுவீச்சில் செயற்பட்டு வருகிறது.

குறிப்பாக, மக்களின் நினைவுகளை அழிக்க முயல்வதனால் சிறிலங்கா அரசும் அதன் படைத்தரப்புக்களும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக கூட்டு சேரவும், தம் மீது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயன்முறைகளுக்கு எதிரான துலங்கல்களை வெளிப்படுத்தவும் முடியாத ஒரு நிலையினை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

தமிழ் மக்களின் வலியினை கூறும் நினைவுத்தூபிகளை அழித்தல் மற்றும் தமது போர் வெற்றிச் சின்னங்களை நிறுவுதலின் ஊடாக தமிழ் மக்களின் நினைவுகளை அழிப்பதில் பெரிதாக எதையும் சாதித்திராத இலங்கை அரசு, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயலானது தமிழ் மக்களிடையே முன்னரை விட எழுச்சியோடு நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் அதை தடுப்பதனூடாக தனது ஆக்கிரமிப்பை சாதித்துவிட முனைகின்றது.

இதுபோன்ற நினைவுகூரும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தை பாதிக்கும்.

அத்தோடு, இலங்கை அரசின் இதுபோன்ற செயல்கள் யாவும் அனைத்துலகச் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயங்கள், பிரகடனங்களை மீறுவதோடு, இலங்கையின் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன என்றுள்ளது.