ஜனாதிபதி பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி விட்டார்!-மயந்த திஸாநாயக்க

46 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் எனக் கூறி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த மக்களை ஏமாற்றியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுவதோடு, அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாகவும் மாற்றப்படுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட தலைவராகவும், தொகுதி அமைப்பாளராகவும் எனக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய எனது பரம்பரையில் சகலரும் ஆற்றியதைப் போன்ற சிறந்த சேவையை நானும் நுவரெலியா மாவட்ட மக்களுக்காக ஆற்றுவேன்.

ஜனாதிபதித் தேர்தல் முதலில் இடம்பெறும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம். எமது பொது வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறக்கப்படுவார். நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள்.

கொட்டகலையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 நாளாந்த சம்பளமாக வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் இது இன்று மிகப் பெரியாக பொய்யாகியுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் 1350 அடிப்படை சம்பளமாக உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்துக்கும் ஜனாதிபதி தெரிவித்த விடயத்துக்குமிடையில் பரஸ்பர தன்மை காணப்படுகிறது. ஜனாதிபதி பொய்யே கூறிள்ளார். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அரசியல் இலாபத்துக்காக ஜனாதிபதி இவ்வாறு பொய்யுரைத்தமையை எண்ணி கவலையடைகின்றோம். எமது ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் நிச்சயம் வழங்கப்படும்.

அத்தோடு அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாகவும் ஆக்கப்படுவர். தேர்தலின் போது கொள்கை பிரகடனத்தை சமர்ப்பிக்கும் போது இதனை நாம் நிச்சயம் உள்ளடக்குவோம் என்றார்.