ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை – ஆஷு மாரசிங்க உறுதி

49 0

கடன் மறுசீரமைப்பு உள்ளிட் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டார். சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் இடம்பெறும்  என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சில் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அரசியலமைப்பின் பிரகாரம்  எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில்  ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  அதனால் ஜனாதிபதி தேர்தலே ஆரம்பமாக நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேநேரம் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு தேவையான புதிய சட்டங்களை பாாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறார். அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும்போது நிதி தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதிக்க இருக்கிறது.

அத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிகளை பெற்றுக்கொள்ளல் போன்ற வேலைத்திட்டங்களை இந்த வருடத்துக்குள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் பாராளுமன்றத்தை கலைத்து இந்த நடவடிக்கைகள் எதனையும் முனனெடுக்க முடியாது. அதனால் எதிர்க்கட்சியோ அல்லது வேறு யாரும் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கப்போவதில்லை என்றார்.