இலங்கை தேர்தல்கள் பற்றிய கணக்கெடுப்பு எதனையும் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் நடத்தவில்லை

44 0

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்து இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் நடத்திய தனித்துவமான கணக்கெடுப்பின் அறிக்கை அவர்களது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவர் ஊடாக இந்த அறிக்கை கசிந்துள்ளதாகவும் ‘அரகல நியூஸ்’ எனும் இணையதளம் செய்தியொன்றை பிரசுரித்துள்ளது.

இந்தச்செய்தியுடன் அறிக்கை ஒன்றும் இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதுடன், அது குறித்து பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த அறிக்கை 330 பல்கலைக்கழக மாணவர்களால் 20 நாட்களாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு எனக் கூறப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தையும், ஒவ்வொரு தேர்தல் தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தியும், ஒவ்வொரு இனத்தவர் மற்றும் ஒவ்வொரு தொழில்முறை நபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டதாக அவர்கள் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 28 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் உள்ளகடக்கப்பட்டுள்ள விடயங்களாவன:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளைப் பெறுவார் எனவும், அக்கட்சி 36.31 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இரண்டாவது அதிக வாக்குகள் கிடைக்கும் எனவும், அது 34.53 சதவீதமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 16.35 சதவீத வாக்குகளைப்பெற்று மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் எனவும், தேசிய மக்கள் சக்தி 10.59 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்ததில், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தினால் அவ்வாறான கணக்கெடுப்பு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும், அவர்களது உத்தியோகபூர்வ இணையதளத்திலோ அல்லது, சமூக வலைதள பக்கங்களிலோ இதுகுறித்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பதையும் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும்  Fact Seeker  உறுதிப்படுத்தியுள்ளது.