சம்பூரில் இடம்பெற்ற சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

32 0

ம்பூரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்தவர்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் சென்றமையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

தற்போது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் வாரத்தை கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கி, நினைவுகூருகிறார்கள்.

இது தமது இழந்த உறவுகளை நினைவுகூரும் செயல் மட்டுமல்ல, உயிருடன் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் கடந்து வந்த பேரவலத்தை – இவற்றின் மத்தியிலும் உயிர் பிழைத்த அதிசயத்தை மீட்டுப் பார்க்கும் ஒரு நிகழ்வாகவும் உள்ளது.

இந்நிலையில், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதற்காக மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் (கமலேஸ்வரன் விஜிதா – வயது 40, வினோத்குமார் சுஜானி – வயது 40,  நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் – வயது 43, ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா – வயது 22)  பொலிஸாரால் இரவு வீடு புகுந்து துன்புறுத்தி, கைது செய்து, கொண்டுசென்றுள்ளனர்.

பொலிஸாரின் இந்த காட்டுமிராண்டித்தனமான  நடவடிக்கையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மேலும், இது தொடர்பில் பெண்கள் அமைப்புகள் தமது கண்டனத்தை தெரிவித்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம்.

பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை சர்வதேச நாட்டுத் தூதுவர்கள் உணர்ந்து சிறிலங்காவுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.