தியத்தலாவை கார் பந்தய விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுமி உயிரிழப்பு!

45 0

தியத்தலாவை,நரியாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற கார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தியத்தலாவை,ஹெலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி  தியத்தலாவை,நரியாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற  “Fox Hill Super Cross 2024” கார் பந்தய போட்டியின் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, போட்டியில் பங்குபற்றிய இரண்டு கார்கள்  ஒன்றுடன் ஓன்று மோதியதில் ஒரு கார் பந்தய திடலை விட்டுவிலகி அங்கிருந்த பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.