முல்லைக் கைத்தறி நெசவாலை முல்லைத்தீவில் உதயம்

56 0

வடக்கு, கிழக்குப் பொருளாதார மேம்பாட்டு நடுவத்தால் கனேடியத் தமிழ்ப் பேரவையின் முன்னெடுப்பில் புதுக்குடிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் முல்லைக் கைத்தறி நெசவு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையம் நேற்றைய தினம் (13.05.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இயங்கா நிலையில் உள்ள தொழிற்சாலைகளைப் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் (குறிப்பாகப் பெண்கள்) வெற்றிகரமாக இயக்க முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டத்தின் வாயிலாக இந்த நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகம் மற்றும் எழுகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்துடன் இணைந்து நேற்றிலிருந்து இந்தத் தொழில் முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலார் சிவராசசிங்கம் ஜெயகாந்த், பிரதேசசபை செயலாளர் சச்சிதானந்தம் கிரிசந்தன், கனடியத் தமிழர் பேரவையின் மாந்த நேயப் பணிகளுக்கான இணைப்பாளர் துரைரத்தினம் இராசலச்சுமி துசியந்தன், வடக்கு, கிழக்குப் பொருளாதார மேம்பட்டு நடுவதின் இயக்குநர் சோதிலிங்கம் பிரதீபன் ஆகியோரால் நேற்றுக் காலை 10.30 மணிக்கு முல்லைக் கைத்தறி நெசவு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் வேறு பல பிரதேச செயலக அதிகாரிகளும், உள்ளூர் தொழில் முனைவோரும் பயனாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.