பொருளாதாரம் இன்னும் கத்தி நுனியிலேயே  உள்ள நிலையிலேயே உள்ளது!

30 0

நாட்டிலுள்ள அனைத்து பாலங்கள் உடைந்து விழுந்தாலும் அதனைத் திருத்துவதற்காக ஒருபோதும் மீண்டும் பணத்தை அச்சடிக்க முடியாது. பணம் அச்சடிப்பதை மத்திய வங்கி  தடை செய்துள்ளது. அத்துடன் ஆட்சிக்கு வந்தால் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றுவதாக எதிர்க்கட்சி தெரிவிப்பது மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்;

பாலங்கள் உடைகின்றன மண் சரிவு ஏற்படுகின்றன அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுள்ளன இவைகள் இதுவரை அரசாங்கத்திற்கு தெரியவில்லையா என அரசாங்கத்தைக் கேள்வி கேட்கின்றனர்.

கடந்த அரசாங்கங்கள் பணத்தை அச்சடித்து அவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தன. தற்போது அவ்வாறு செய்ய முடியாது. மத்திய வங்கி பணம் அச்சடிப்பதைத் தடை செய்துள்ளது அதனால் நாட்டில் உள்ள அத்தனை பாலங்களும் உடைந்து விழுந்தாலும் பணம் அச்சடிக்கப்பட மாட்டாது. மகாவலி கங்கையை வடக்குக்கு திருப்புவதும் கடன் மூலமாகும்.

தாங்கள் அரசாங்கத்தை அமைத்ததும் கடன் தொடர்பான உடன்படிக்கைகளை மாற்றுவதாக தெரிவிப்பது நாட்டு மக்களை ஏமாற்றும் பேச்சாகும், கடந்த அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடனை செலுத்துவது அவசியம். அதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் இன்னும் கத்தி நுனியிலேயே  உள்ள நிலையிலேயே உள்ளது. தவறி ஒரு அடியை எடுத்தாலும் கால் படுகாயமடையும் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.