இடம்பெற்றுவரும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளி முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டு உரிய புள்ளிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (13) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ரோஹிணி கவிரத்ன தமது கேள்வியின் போது;
பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து விஞ்ஞான பாடத்துக்கு 12 புள்ளிகளைக் கொண்ட வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கற்பிக்காத பாடத்திலிருந்து கேள்வி கேட்கும் போது பரீட்சாத்திகள் எவ்வாறு பதிலளிப்பார்கள்?.இவ்விடயம் தொடர்பில் கல்வியமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை தற்போது இடம்பெறுகிறது.கொவிட் தொற்று காரணமாகப் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.பாடத்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்யாத காரணத்தால் ஒருசில பாடப் பிரிவுகள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தன.
அவ்வாறு நீக்கப்பட்ட சில பிரிவுகளிலிருந்து இம்முறை விஞ்ஞான பாடத்துக்கான கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன.ஒருசில கேள்விகளுக்கு விடை இல்லை, இன்னும் சில கேள்விகள் மிகுந்த முரண்பாட்டுடன் காணப்பட்டுள்ளன.அதனால் பரீட்சாத்திகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றார்.
அதற்குப் அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
விஞ்ஞான பாட வினாத்தாளில் இடம்பெற்றுள்ள தவறுகள் தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், அந்த வினாத்தாள்களைத் தயாரித்த விரிவுரையாளர்களை அழைத்து நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறு இருந்தபோதும் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளி முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டு உரியப் புள்ளிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இயல்பாகவே அனைத்து பரீட்சைகளிலும் வினாத்தாள் வழங்கும் இறுதி சந்தர்ப்பத்தில் விடை மாதிரிக்கு ஏற்ப சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும்.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளின் தரத்தை உறுதி செய்வது அவசியம், அதற்கிணங்க வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது என்றார்.