மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

59 0

மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவுசெய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கலை கண்டித்து இன்றைய தினம் திங்கட்கிழமை (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கைக்காக நெடுங்கண்டல் புலவை திறந்துவிடுமாறு கோரியும் அதிகாரிகளின் பழிவாங்கலை கண்டித்தும் மாந்தை மேற்கு விவசாயிகளே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது விவசாயிகள் மன்னார் மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்டு,  ‘அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்’, ‘திறந்துவிடு திறந்துவிடு நெடுங்கண்டல் புலவை திறந்துவிடு’, ‘கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்றனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கையிடப்பட்ட காலந்தொட்டு இன்று வரை ஒருபோதும் நெடுங்கண்டல் புலவு பூட்டப்படவில்லை.

1974ஆம் ஆண்டு நீர் தட்டுப்பாடு வந்தபோது காலபோகத்தில் செய்கையிடப்படும் 40 ஏக்கருக்கு சிறுபோகத்தில் 1 ஏக்கர் என்ற தீர்மானத்தில் 40:1 என்ற விகிதத்தில் விவசாயம் செய்யப்பட்டபோது சின்ன உடைப்பு துலுசின் கீழ் உள்ள புலவுகள் மாத்திரம் திறக்கப்பட்டது.

இதில் நெடுங்கண்டல் புலவு முதன்மையானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட நீர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து புலவுகளும் பூட்டப்பட்டு, மன்னார் மாவட்ட விவசாயிகளின் விதைநெல் தேவைக்காக நெடுங்கண்டல் புலவு மாத்திரம் திறந்து விவசாயம் செய்யப்பட்டது.

இம்முறை எமது நெடுங்கண்டல் புலவு பூட்டப்பட்டதற்கான காரணத்தை அறிய, எமது கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் உரிய அதிகாரிகளை சந்தித்து வினவியபோது, 2023ஆம் ஆண்டின் புலவு பங்கீட்டில் தனிப்பட்ட நபர் ஒருவருடனான முரண்பாட்டுக்கு பழி தீர்க்கும் வகையில் இம்முறை எமது புலவு பூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொண்டுள்ளோம்.

இந்த விடயத்துக்காக நாம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மன்னிப்பு கோரினோம். உரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து மிகத் தெளிவாக விளக்கியிருந்தோம். சாதக பாதக நிலையை தெளிவுபடுத்தி எமது புலவை திறந்துவிடும்படி பணிவாக வேண்டினோம்.

எனினும், ஏழை விவசாயிகளான நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம். இதன் அடிப்படையிலேயே எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இன்றைய தினம் காலை மாவட்டச் செயலகத்துக்கு முன் ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.

2024ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கைக்காக நெடுங்கண்டல் புலவை திறந்துவிடுமாறு விவசாயிகள் சார்பாக கோரிக்கை முன்வைக்கிறோம் என்றனர்.

மேலும், இப்போராட்டத்தின்போது விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் விவசாயிகள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாகிர் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.