ஐ.நா. சபையின் இளம் அமைதித் தூதராக மலாலா யூசப்சாய் பொறுப்பேற்பு

315 0

ஐ.நா. சபையின் இளம் அமைதித் தூதராக மலாலா யூசப்சாய் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் அவருக்கு பட்டத்தை வழங்கி கவுரவித்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய். கடந்த 2012-ஆம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். தலையில் பலத்த காயத்துடன் லண்டன் கொண்டு வரப்பட்ட மலாலா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர்பிழைத்த அவர், அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் 19 வயதே ஆன மலாலா ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது பிரிட்டனில் “ஏ” லெவல் வகுப்புகளில் இருக்கும் 19 வயதாகும் மலாலாவிற்கு, புகழ்பெற்ற பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு வந்துள்ளது. பெண் கல்வியில் சிறப்பு கவனத்தை செலுத்தும் வகையில் மலாலா அந்த வாய்ப்பை ஏற்கவுள்ளார்.

தற்போது, பெண்களுக்கான கல்வி உரிமை மற்றும் சமூக அந்தஸ்து குறித்து உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மலாலா, ஐ.நா சபையின் இளம் அமைதித் தூதராக பொறுப்பேற்றுக்கொண்டார். நியூயார்க்கில் பட்டத்தை பெற்று கொண்ட மலாலா மாற்றம் நம்மிலிருந்து தொடங்குகிறது, அது இப்போதே தொடங்கவேண்டும். உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால் யாருக்காகவும் காத்திராமல் தற்போதே செயல்பட தொடங்க வேண்டும் என்றார்.

ஐ.நாவின் பொதுச் செயலர் ஆண்டோன் யுகோடேரிஷ் கூறுகையில், உலகில் மிக முக்கியமாக கருதப்படும் கல்வியின் சின்னம் என மலாலாவை புகழ்ந்துள்ளார். கலை, இலக்கியம், அறிவியல், பொழுதுபோக்கு, விளையாட்டு அல்லது பொது வாழ்வுடன் தொடர்புடைய பிற துறைகளிலிருந்து ஐ.நாவின் அமைதிக்கான தூதராக செயல்படுவார் என்றார்.