ஸ்ரீ ல.சு.க.யின் மே தினக் கூட்டத்திற்கு மது அனுசரணை கிடையாது- மஹிந்த

262 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பொலிதீன், பிளாஸ்டிக் மற்றும் மதுசார அனுசரணை என்பன கிடையாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இம்முறை மே தினத்துக்கு, தங்களுக்கு எந்தப் போட்டியும் இல்லையெனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டி நகரை மையப்படுத்தி கூட்ட ஏற்பாடுகள் சிறப்பாக தயாராகி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இம்மே தினக் கூட்டத்துக்கு ஐ.ம.சு.மு.யின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீ ல.சு.க. இரண்டாக பிரியவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சி அமைக்கிறார்கள். அவ்வாறு அமைப்பதற்கு சகலருக்கும் உரிமையும் இருக்கின்றது. இருப்பினும், தான் அறிந்த வரையில் அந்த புதிய கட்சியில் ஸ்ரீ ல.சு.க.யின் உறுப்பினர்கள் எவரும் உறுப்புரிமையை பெறவில்லையெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலவச உணவு, ஒரு நாள் கொடுப்பனவு, இலவச மதுசாரம் என்பவற்றுக்காகவே அதிகமான மக்கள் மே தினக் கூட்டங்களில் கலந்துகொள்வது இலங்கை நாட்டின் மரபாகவுள்ளது.

மே தினம் என்பது உண்மையில் அதிகார வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் முன்னெடுத்த  உரிமைப் போராட்டத்தை நினைவு கூறும்  ஒரு தினமாகும். ஆனால், இன்று இப்போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது என்பது பெரும்பாலோரின் ஆதங்கமாகும்.

இன்று ஆட்சியிலுள்ள அதிகார வர்க்கத்தின், அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு போடப்படும் அரசியல் மேடையாக தொழிலாளர் தினம் மாறியுள்ளது. தொழிலாளர்கள் இந்த தொழிலாளர் தினத்திலும் அரசியல்வாதிகளின் நாடகங்களினால்,  உரிமைகள் இழந்தவர்களாக ஆக்கப்படுவது கவலைக்கிடமான ஒன்று என்பது பொது மக்களின் அடிமனதின் படிவுகளாகும்.