வடக்கு மக்கள் என்னை அழைத்து ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில்

419 0

வடக்கு மக்கள் என்னை அழைத்து ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் அவர்களது வீடுகள் காணப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் கூறியுள்ளார்.

வடக்கில் உள்ள மக்களுக்கு உரிய வகையில் அமர்ந்து சாப்பிடக்கூட கதிரை மேசை இருக்கவில்லை. இந்த நிலைமைக்கு கடந்த அரசாங்கமே காரணம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.முன்னைய அரசாங்கமானது வடக்கு மக்களின் அடிப்படைத் தேவையினை பூர்த்தி செய்யாமல், 100 பில்லியனுக்கும் அதிகளவில் செலவு செய்து வீதிகளையும், துறைமுகத்தையும் அமைத்துக் கொடுத்தது.

இதன் காரணமாகவே தமிழ் மக்கள் அவர்களது உண்மையான மன நிலையினை கடந்த தேர்தலின் போது வெளிக்காட்டினார்கள்.கடந்த அரசாங்கம் பாரிய வீதி அபிவிருத்திகளை செய்து கொடுத்தது. ஆனால் அந்த வீதியில் செல்வதற்கு ஒரு சைக்கிளை கூட பெற்றுக்கொடுக்கவில்லை.

அத்துடன், அன்று யாழில் சில கிராமங்களுக்கு சென்ற போது மக்கள் என்னை அழைத்து ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாமல் அல்லல்பட்டார்கள்.அதற்கு அவர்களிடம் மேசை,கதிரை, சாப்பிடுவதற்குரிய உபகரணங்கள் இல்லாமையே காரணம். இருந்தாலும் அன்று நான் அவர்களுடன் இருந்து சாப்பிட்டு விட்டே வந்தேன்.இதனை கருத்திற்கொண்டு தற்போதைய அரசாங்கம் மக்களின் மனித வளங்களை மேம்படுத்துவது தொடர்பில் அதிக அக்கறை காட்டிவருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.