ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று – செல்வம் அடைக்கலநாதன் பங்கேற்கார்

50 0

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) வவுனியா கோயில் புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது கூட்டணியின் புதிய செயலாளர் நியமனம் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கூட்டணியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வந்திருந்த ஆர்.ராகவனின் மறைவை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தின்போது ஜனநாயக கூட்டணியை மாவட்டம் தோறும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. விசேடமாக கூட்டணியின் கிளைகள் மறுசீரமைப்பு, புதிய அங்கத்துவம் சம்பந்தமான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கொள்கையளவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கும் முயற்சிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், கூட்டணியின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வெளிநாடொன்றுக்குச் சென்றிருப்பதன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் கட்சியின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம், ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.