தோட்டத் தொழிலாளர் உரிமையை முன்னிறுத்தி மலையகமெங்கும் 10,000 கையெழுத்து வேட்டை

33 0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பங்களிப்புடன் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளையும் உரிமைகளையும் அரசு அங்கீகரித்து அதற்கான சட்டமூலத்தின் ஊடாக தேவைகளை அமுல்படுத்த வேண்டி அரசுக்கு வலியுறுத்தி அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒருவார காலத்திற்குள் 10 ஆயிரம் கையெழுத்துக்களைத் திரட்டுவதற்கான பணிகள் ஏற்பாடாகி வருவதாகவும் புதன்கிழமை (4) அதன் அறிமுக நிகழ்வு கொட்டகலை காங்கிரஸ் தொழில் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளதாகவும் இ.தொ.கா ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் தொழில் உரிமைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள பிரசுரத்தின் வாயிலாக C155, C187, C190 ஆகிய எண்களின் அடிப்படையில் வேலைத்தள பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சட்டத்தை உடனடியாக அங்கீகரித்தல், வேலைத்தள பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சட்டத்தை அமுலுக்கு உடன் கொண்டு வருதல், வேலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி முழு மலையகத்திலும் சுமார் 10 ஆயிரம் கையெழுத்துக்களைத் திரட்டும் பணியை அவ்வப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ளனர்.

இதன்படி, தலவாக்கலை, நுவரெலியா, ஹட்டன், இராகலை, பதுளை, பண்டாரவளை, புசல்லாவ, மாத்தளை, இரத்தினபுரி, அவிசாவளை உள்ளிட்ட பிரதேசங்களிலும் குறிப்பாக முழு மலையகத்திலும் ஏப்ரல் 3ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இக்கையெழுத்துக்களைத் திரட்டும் பணிகள் தொடரவுள்ளன.

பாதுகாப்பான தொழிலுக்கு ஏற்ற சூழலைப் பெறுவதற்குத் தொழிலாளர்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் எவ்வாறிருப்பினும் பாதுகாப்பற்ற தொழில் நிலைமைகள் காணப்படுமாயின் அதனைக் கேட்கும் உரிமை, அனுபவம் அல்லது பயிற்சி பெறாத தொழில் அல்லது சட்டப்பூர்வம் அல்லாத தொழிலில் ஈடுபடுத்த வற்புறுத்தல் ஏற்படுமாயின் அதனைத் தகுந்த காரணம் காட்டி மறுக்கும் உரிமை அனைத்து தொழிலாளர்களுக்கும் உண்டு என்பதை வலியுறுத்துகின்றோம்.

தொழிலாளர்கள் ஒன்றிணைந்து நடாத்தப்படும் இன்றைய நிகழ்வில் இ.தொ.கா உத்தியோகத்தர்களும் பெருந்திரளான தொழிலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.