சிறிலங்கன் விமானம் தாமதமாகியதற்கு முகாமைத்துவம் மற்றும் தொழிற்சங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும்

70 0

சிறிலங்கன் விமான நிறுவனத்தை முறையாக நடத்திச்செல்ல முடியாது என்றால் அதனை மூடிவிட வேண்டிய நிலை ஏற்படும். நிறுவனத்தின் முகாமைத்துவம் மற்றும்  தொழிற்சங்கங்களின் பலவீனம் காரணத்தினாலே விமானம சேவை தாமதத்துக்குக் காரணமாகும் என துறைமுகங்கள். கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பல் துறை  மற்றும் விமான சேவைகள் அமைச்சில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை சிறிலங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சேவை குறிப்பிட்ட நேரத்துக்குப் பயணிக்க முடியாமல் தாமத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் அங்கு ஆத்திரமடைந்ததால் அமைதியின்மை நிலையும் ஏற்பட்டிருந்தது.

விமானம் ஒன்று ஏதாவது ஒரு காரணத்தினால் கோளாறு ஏற்பட்டு, அதனை இயக்க முடியாத நிலை ஏற்பட்டால். அதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டியது, அந்த நிறுவனத்தின் முகாமையாளர்களின் கடமையாகும். ஆனால்  தொழிற்சங்கங்களும் முகாமையாளர்களும் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் பயணிகளை அசெளகரியங்களுக்கு உள்ளாக்கி, சிறிலங்கன் விமான சேவையின் நற்பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

அதனால் சிறிலங்கன் விமான சேவையை முறையாகக் கொண்டுசெல்ல முடியாது என்றால் அதனை மூடிவிடவேண்டி ஏற்படும். ஏனெனில் இவ்வாறான நடவடிக்கை காரணமாக இந்த விமான சேவையை தனியார் மயமாக்க பல நடவடிக்கைகள் எடுத்தபோதும் அதற்கு யாரும் முன்வருவதில்லை. சிறிலங்கன் விமான சேவையின் பொறியியலாளர் துறை மற்றும் விமானிகள் கடந்த காலத்தில் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பு காரணமாக இந்த நிறுவனத்துக்கு இருந்த வரவேற்பு தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால் சிறிலங்கன் விமான நிறுவனத்தை இலவசமாக வழங்கினாலும் அதனை பொறுப்பேற்க யாரும் முன்வருவதில்லை.

என்றாலும் சிறிலங்கன் விமான நிறவனத்தை  தனியார் துறையுடன் இணைந்து மேற்கொள்வதன் முலமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். அவ்வாறு இல்லாமல் தொழிற்சங்கங்கள் காலத்துக்கு காலம் பல்வேறு காரணங்களை தெரிவித்துக்கொண்டு, முறையான விமான சேவையை மேற்கொள்ளாது. அதிகமான சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். அதனால் சிறிலங்கன் விமான நிறுவனத்தின் தற்போதைய நிலைமைக்கு தொழிற்சங்கங்களும் அதன் முகாமையாளர்களுமே பொறுப்புக்கூற வேண்டும்.

அதேநேரம் விமான நிலையங்களை பெற்றுக்கொள்ள இந்தியாவின் அதானி நிறுவனம், சீன, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்பார்த்து இருக்கின்றன. ஆனால் எமது விமான நிலையங்களை வெளிநாடுகளுக்கு வழங்க நாங்கள் தயாரில்லை என்றார்.