“பரந்தூர் விவசாயிகளை கைது செய்தது அரச பயங்கரவாதம்” – சீமான் காட்டம்

34 0

“புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட பொதுமக்களை திமுக அரசு கட்டாயப்படுத்தி கைது செய்திருப்பது அரச பயங்கரவாதமாகும். திமுகவின் இத்தகைய அடக்குமுறைகள் தொடர்ந்தால் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக அரசுக்கும், இந்தியாவை ஆளும் பாஜக அரசுக்கும் பரந்தூர் பகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் எடுக்க தமிழக அரசு அனுமதியளித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. நிலம் எடுக்கும் உத்தரவை எதிர்த்து போராடிய மக்களை திமுக அரசு கைது செய்திருப்பது கொடுங்கோன்மையாகும்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி, கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக அவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், திமுக அரசு போராடும் மக்களின் உணர்வையும், உரிமையையும் சிறிதும் மதியாது, ஆட்சி அதிகாரத் துணைகொண்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்கி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்.26) புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஏகனாபுரம் பெண்கள், முதியவர்கள், விவசாயிகள் உட்பட பொதுமக்களை திமுக அரசு கட்டாயப்படுத்தி கைது செய்திருப்பது அரச பயங்கரவாதமாகும்.

விளை நிலங்களை அழிக்கும் திட்டங்களை தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அடக்கி ஒடுக்கி கைது செய்திருப்பது நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.