சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை

323 0

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ந் திகதி தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விசாரித்து, அவர்களை விடுதலை செய்து 2015-ம் ஆண்டு, மே மாதம் 11-ந் திகதி தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து மேல் நீதிமன்றம் கர்நாடக அரசும், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் விசாரித்து ஜெயலலிதா மரணம் அடைந்து விட்ட நிலையில், அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போய் விடுகிறது என கூறி கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தீர்ப்பு கூறினர்.

ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கு பெங்களூரு தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர். மூவரும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டது தெரிய வந்து இருப்பதாக கூறிய நீதிபதிகள், அவர்கள் பெங்களூரு தனிக்கோர்ட்டில் உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டனர். அவர்களும் சரண் அடைந்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால் ஜெயலலிதா மீதான தீர்ப்பில் மாற்றம் செய்யக்கோரி மேல் நீதிமன்றில் கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் 21-ந் திகதி மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருந்த முக்கிய அம்சங்கள்:-

* ஒரு குற்ற வழக்கில் வாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைத்த பின்னர் ஒருவர் இறந்து விட்டால், மேல் முறையீட்டு வழக்கு இல்லாமல் போய்விடும் என்ற கேள்விக்கே இடம் இல்லை. வழங்கப்படுகிற தீர்ப்பு, அந்த நபர் உயிரோடு இருந்து வழங்கப்பட்டிருந்தால் என்ன வலிமையுடன் இருக்குமோ, அதே வலிமையுடன் இருக்க வேண்டும்.

* ஒரு நபர் இறந்து விட்டால் ஆடல்முறையீடு அற்ப்போவதற்கு அரசியல் சாசனத்தில் எந்த சட்டப்பிரிவும் வகை செய்யவில்லை.மேல் நீதிமன்றம் 2013-ம் ஆண்டு விதிகளும் இதுபற்றி கூறவில்லை.

* இந்த வழக்கில் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், சிறை தண்டனை அனுபவிக்கும் நிலை இல்லை. ஆனால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது சட்டப்படி நிலைத்து நிற்கத்தக்கது. அதை அவரது சொத்துகள் மூலம் வசூலிக்க வேண்டும்.

* ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்குவது பலனற்றது; இருப்பினும் அபராதம் விதிப்பது, சட்டவிரோதமாக சேர்த்த சொத்தை பறிமுதல் செய்வது நீதிமன்றின் பரிசீலனைக்கு உரியது.

* பிப்ரவரி 14-ந் திகதி வழங்கிய தீர்ப்பை மேல் நீதிமன்றம் மாற்றி அமைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு எதிராக தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மறு ஆய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்றில் , மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை, திறந்த அமர்வுகளில் நடைபெறுவது இல்லை. நீதிபதிகளின் அறையில் நடைபெறுவதுதான் வழக்கமான நடைமுறை. மேலும், வழக்கில் தொடர்புடைய இரு தரப்பு வக்கீல்களும் அனுமதிக்கப்படாமல், நீதிபதிகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வார்கள்.

அதன்படி கர்நாடக அரசின் மறுஆய்வு மனு, மேல் நீதிமன்றம் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மேல் நீதிமன்றில் மறுஆய்வு மனுக்களை தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

கர்நாடக அரசின் மறு ஆய்வு மனுவை நாங்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலனை செய்தோம். நாங்கள் ஏற்கனவே பிப்ரவரி 14-ந் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைப்பதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று கருதுகிறோம். அதன் அடிப்படையில் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு அபராதம் கிடையாது. அவரது சொத்துகளை விற்று ரூ.100 கோடி அபராதம் வசூலிக்கும் சூழல் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.