இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் ; இருவர் கைது

52 0

இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் நால்வரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பதியத்தலாவை பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரும் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு நபருமாவர்.

ஹோமாகம டிப்போவுக்குச் சொந்தமான இரு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் ஊழியர்களான இரு பஸ் சாரதிகள் மற்றும் இரு பஸ் நடத்துனர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்களில் ஒருவரான தனியார் பஸ் ஒன்றின் நடத்துனர் அவிசாவளை பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு பஸ் சாரதியையும் நடத்துனரையும் தாக்கிய சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஸ் ஊழியர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹோமாகம பஸ் டிப்போவின் ஊழியர்கள் இன்று (9) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.