அரசியல் கைதிகள் விடுதலையில் கரிசனை கொள்ளுங்கள்

59 0

தமிழர் பிரதேசங்களில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகள் தொடர்பில் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி அவதானம் செலுத்தாமல் இருந்தமை கவலைக்குரியது.விட்டுக் கொடுப்புடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறாயின் ஆனந்த சுகாதரன் போன்ற அரசியல் கைதிகளை மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார பாதிப்பை மையப்படுத்தியதாக ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை அமைந்திருந்தது.இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இன ரீதியிலான ஒடுக்குமுறை தொடர்ச்சியாக இடம்பெறுகிறது.தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.தமிழர்களின் கலாச்சார உரிமைகள் அழிக்கப்படுகின்றன.இவை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரியது.காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதி பேசியிருந்தார். 2 மில்லியன் மக்களுக்குக் காணி  உரிமை வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரர் கிராமத்தில் உள்ள மக்களின் சொந்த காணிகளை ,வனவளத்திணைக்களம் தமக்குச் சொந்தமானது என்று குறிப்பிட்டுக் கொண்டு  அடையாளப்படுத்தல் தூண்களை நாட்ட முயல்கிறது. மக்களுக்குக் காணி உரிமை வழங்குவதாக ஜனாதிபதி பெருமையாகப் பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது மன்னார் மாவட்டத்தில் மக்களின் விவசாய காணிகள் அரச திணைக்களத்தால் அபகரிக்க முயற்சிக்கிறது. மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து  வனவளத்துறை திணைக்களம் காணி அபகரிப்பு முயற்சியைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது.

காணி விடுவிப்பு விவகாரத்தில் ஜனாதிபதி ஒன்றைக் குறிப்பிடுகிறார், அரச அதிகாரிகள் அதற்கு மாற்றீடாக செயற்படுகிறார்கள். இவ்வாறன செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தாமல் இருப்பது கேள்விக்குரியது.

யுத்த காலத்தில் பலர் அரசியல் கைதிகளாக பலர் கைது செய்யப்பட்டார்கள்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளார்.அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.மிகுதியாக உள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை  செய்ய வேண்டும் என்பதைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனந்த  சுதாகரன் என்ற அரசியல் கைதியின் மனைவி 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உயிரிழந்தார்.தனது மனையின் இறுதி சடங்குக்கு ஆனந்த சுகாதகரன் சென்றிருந்த வேளை அவரது மகள் தானும் அப்பாவுடன்  சிறைக்குச் செல்கிறேன் என்று குறிப்பிட்ட அவருடன் செல்ல முற்பட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை அழைத்து,அவரை விடுதலை செய்வதாக வாக்குறுதி  வழங்கியிருந்தார். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளின் நலன் கருதி  ஆனந்த சுகாதரனையும், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். இதற்கு விசேட குழு அமைத்து அவர் கவனம் செலுத்த வேண்டும்.விட்டுக் கொடுப்புடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.தனியார் நிலங்கள் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளன.ஆகவே விட்டுக் கொடுப்புடன் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.