தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது

56 0

பேச்சுவார்த்தைகள் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என்று குறிப்பிடுவதைப் பழக்கமாகக் கொண்டுள்ள ஜனாதிபதி  , கொள்கை பிரகடன உரையில் ‘இனப்பிரச்சினைக்குத் தீர்வு’ குறித்து ஒரு வார்த்தை கூட  குறிப்பிடவில்லை. பொருளாதார பாதிப்புக்கு  அடிப்படை காரணியாக உள்ள தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. ஆகவே ஜனாதிபதியின் கொள்கை உரையை நிராகரிக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி தனது கொள்கை பிரகடன உரையில் பொருளாதார  நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டதாக வெற்றி வார்த்தைகளைக் குறிப்பிட்டார்.ஆனால் உண்மையில்  எவ்வித முன்னேற்றமும் இதுவரை எட்டப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் இரவல் வாங்குவது மாத்திரம் அரசாங்கத்தின் பிரதான வெற்றியாகக் காணப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். தேர்தல்களை நடத்தும் திகதியை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. இது ஜனநாயக நாடே தவிரச் சர்வாதிகார நாடல்ல, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட் போது நிதி விடுவிப்பை ஜனாதிபதி தடுத்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகள் ஸ்தம்பிதமடைந்தது. இதனை வன்முறையான செயற்பாடு என்று குறிப்பிட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து தனிநபர் பிரேரணையை முன்வைத்துப் பல  யோசனைகளை முன்வைத்துள்ளேன். இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜனாதிபதியின் அறிவிப்புக்கள் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்ள முடியாது.

ஜனாதிபதி தனது கொள்கை பிரகடன உரையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து ‘இனப்பிரச்சினைக்கு உடனடியான தீர்வு காண்போம், நீங்கள் தயாரா, நீங்கள் தயாரா எனப் பெயர் குறிப்பிட்டு வினவினார்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில்  3 தடவைகள் சர்வக்கட்சி கூட்டத்தை நடத்தி 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகப் பறைசாற்றினார். 76 ஆவது சுதந்திர தினமும் கொண்டாடப்பட்டது, ஆனால் கொள்கை பிரகடனத்தின் இனப்பிரச்சினை பற்றி அவர் ஏதும் பேசவில்லை.

சர்வக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த போது, இது வெறும் வாக்குறுதிகள் மாத்திரமே மக்களாணை இல்லாத நிலையில் ஏதும் செய்ய முடியாது. இனப்பிரச்சினைக்குத் தீர்வை எதிர்க்கும்  போலி பெரும்பான்மையுள்ள தரப்பினரை வைத்துக் கொண்டுள்ள ஜனாதிபதியால் தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டோம்.

அத்துடன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை, தடையாகச் செயற்பட்டோம் என்று எவரும் குறிப்பிடக் கூடாது என்பதற்காகக் கூட்டங்களில் கலந்து கொண்டோம் என்பதையும் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம். இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்கான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்பதை வெளிப்படையாகக் குறிப்பிட்டோம். ஆனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் அவர்கள் ஜனாதிபதியைப் பார்த்து ‘இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் ஒரேயொரு முடிவு தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது ‘ என்று குறிப்பிட்டார். அது என்னவென்று ஜனாதிபதி கேட்ட போது சம்பந்தன் அவர்கள் ‘அடுத்த கூட்டத்துக்கான திகதி’ என்று பதிலளித்தார்.

கூட்டங்களை நடத்தி பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண்போம் என்று குறிப்பிடுவதை மாத்திரம் பழக்கமாகக் கொண்டுள்ள ஜனாதிபதி  குறிப்பிடப்பட்ட விடயங்களை மறுதலிக்கும் வகையில் கொள்கை பிரகடன உரை ஆற்றியுள்ளார். தமிழ்த் தேசிய பிரச்சினை இந்த நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு  அடிப்படை காரணியாகக் காணப்படுகிறது. இனப்பிரச்சினைக்கு  அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணாமல் ஆயுதம் ஊடாக தீர்வு வழங்குவதற்காகக் கடன் பெற்று பொருளாதார பாதிப்பை அரசாங்கமே தோற்றுவித்தது என்பதைக் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

உண்மையை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விழிப்புடன் தக்க பதிலளிக்க வேண்டும். தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்பதைக் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.