கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக்கூட்டத்தில் இருபது இலட்சம் பேர் கலந்துகொள்வர் : பந்துல குணவர்தன

245 0

கூட்டு எதிர்கட்சி காலிமுகத்திடலில் நடத்தவுள்ள மே தினக்கூட்டத்தில் இருபது இலட்சம் பேர் கலந்துகொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரவித்தார். 

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளையிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது எழுந்துள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் அரசாங்கம் தீர்வு முன்வைப்பதாகத் தெரியவில்லை. எனினும் முன்னாள் ஆட்சியின்போது நாட்டில் எந்தவொரு பிரச்சினை எழுந்தாலும் முன்னாள் ஜனாதிபதி அதில் தலையிட்டு அதனை தீர்த்து வைத்தார். அதனால்தான் தற்போதுப்போன்று கடந்த ஆட்சியில் நாட்டில் தொழிற்சங்க போராட்டகள் நடைபெறவில்லை.

மேலும் அப்போது தொழிற்சங்கங்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையில் பிரச்சினை ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு அதனைத் தீர்த்து வைத்துள்ளார். அவ்வாறன நிலை இந்த ஆட்சியில் இல்லை. ஆகவே தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவரும் முன்வருவதாகத் தெரியவில்லை. அதனால்தான் தற்போது தொடர்ச்சியாக தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.