எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் திட்டத்திலிருந்து அவுஸ்திரேலிய நிறுவனத்தை நீக்குவது தொடர்பில் அவதானம்

57 0

இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் நிறுவனத்தைக் குறித்த திட்டத்திலிருந்து நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சைனோபெக் நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டமையால், எரிபொருள் இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் 500 மில்லியன் டொலரை அரசாங்கத்தால் மீதப்படுத்த முடிந்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சைனோபெக் ஆகிய நிறுவனங்களுக்கிடையில் போட்டி காணப்படுகிறது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் எரிபொருள் விலைகளில் மக்களுக்குச் சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகின்றோம்.

தற்போது அமெரிக்காவின் ஆர்.எம். பார்க் நிறுவனம் 3 மில்லியன் டொலரை வைப்பு செய்துள்ளது. அனுமதிப்பத்திர கட்டணமாக 2 மில்லியக் டொலரும், நிலையான வைப்பாக 1 மில்லியன் டொலரும் இவ்வாறு வைப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த நிறுவனம் அதன் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் நிறுவனம் கால அவகாசம் கோரியுள்ள போதிலும், எவ்வித வைப்புக்களையும் பேணவில்லை.

எனவே இந்த நிறுவனம் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கமைய செயற்படாவிட்டால், இந்த திட்டத்திலிருந்து அதனை நீக்கி விட்டு, ஏனையோருக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் ஆராய்ந்து குறித்த நிறுவனத்தை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.