யானை – மனித மோதலுக்கு தீர்வு கோரி நீதிக்கான மய்யம் எழுத்தாணை மனுத் தாக்கல்

81 0

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தெரிவித்தார்.

யானை – மனித மோதலை தடுக்க நீதிக்கான மய்யம் எடுத்துவரும் சட்ட நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு, அமைப்பின் சாய்ந்தமருது காரியாலயத்தில் புதன்கிழமை (7) இரவு இடம்பெற்றபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் நீதிக்கான மய்யம் அமைப்பின்   தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயிலுடன் பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான், செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் ஆகியோர் இணைந்திருந்தனர்.

இதன்போது அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது :

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசமானது  யானைகள் வாழ்கின்ற பிராந்தியம் அல்ல. குறிப்பிட்ட காலங்களில் அம்பாறை மாவட்டத்தினுள் வருகின்ற யானைகள் அம்பாறை மாவட்ட யானைகள் அல்ல. வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு யானைகள் இங்கு விடப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆராயப்பட வேண்டியுள்ளது.

தற்போது இவ்விடயம் பாரிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை-/ மனித மோதலுக்கு இதுவரை தீர்வு பெறப்படவில்லை. இதனால் யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, எமது அமைப்பு எழுத்தாணை மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (05) தாக்கல் செய்தது.

அதன்படி, கடந்த 5 வருடங்களில் யானைகள் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கிழக்கு மாகாணம் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது. அதிலும் அம்பாறை மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டி, இதற்கு தீர்வு வழங்குமாறு கோரியே இந்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு எதிராக எமது அமைப்பு எழுத்தாணை மனுவை தாக்கல் செய்துள்ளது என குறிப்பிட்டார்.